Sunday, March 29, 2009

தினமலருக்கு கண்டனம் .


உயர்திரு தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
தினமலர் 22.03.2009ஆம் நாளிட்ட சென்னை, மதுரை, நெல்லை பதிப்புகளில் மறுமலர்ச்சி தி.மு.க.வை திட்டமிட்டு களங்கப்படுத்தி செய்தி வெளியிடப்பட்டு உள்ளது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
தேசியத் தமிழ் நாளிதழாகத் தம்மைவிளித்துக் கொள்ள விரும்பும் ‘தினமலர்,’ சமீப காலங்களில் மறுமலர்ச்சி தி.மு.க. குறித்து பரப்புகின்ற செய்திகளால் ‘தினமலர்’ தனது நடுநிலை அணுகுமுறையை முற்றிலும் இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது.
எந்தக் கட்சி குறித்து விமர்சனங்கள் எழுதப்படுகிறதோ அந்தக் கட்சியின் பிரதிநிதியிடமும் உரிய பதிலைக் கேட்டு அதனையும் பதிவு செய்து தமது நடுநிலையை உறுதி செய்திட வேண்டும் என்ற பத்திரிகைத் தர்மத்தை ‘தினமலர்’ துறந்துவிட்டதோ என்ற எண்ணம்தான் தங்கள் பத்திரிக்கையைப் படிக்கின்ற பலருக்கும் ஏற்படுகிறது.
தினமலரின் அவசரகோல - ஒரு தலைப்பட்சமான விமர்சனங்களைப் படித்து வைகோவின் அன்புக் கண்மணிகள் நாங்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றோம்.
கருத்துச் சுதந்திரம், நடுநிலை தவறாமையில் நம்பிக்கை தினமலருக்கு இருப்பது உண்மையானால் உணர்ச்சி உள்ள மறுமலர்ச்சி தி.மு.க. தொண்டர்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் எனது கடிதத்தை வெளியிட வேண்டுகிறேன்.
அரசியல் கட்சிகள் என்பது வாரிசுகளின் வேலை வாய்ப்பு அலுவலகங்களாக ஆக்கப்பட்டு வரும் கொடுமைகளைக் குறி வைத்து வீழ்த்திவருவதோடு, உழைக்கின்ற தொண்டனே ஒரு கட்சியில் உயர்வு பெற வேண்டும் என போராடி வருகின்ற தலைவர் வைகோ.
கண் விழிக்காத குக்கிராமங்களில் கடமையாற்றுகின்ற எளியத் தொண்டன், மறுமலர்ச்சி தி.மு.க. எனும் மாளிகையைத் தாங்கி நிற்கின்ற தூண்களாக விளங்குகின்ற மாவட்டச் செயலாளர்கள், நெருப்பாற்றில் நீந்தும் இலட்சியப் பயணத்தில் தொடர்ந்து வரும் தளகர்த்தர்கள் என அனை வரையும் தம் சகாக்களாகவே ஏற்றுப் பணியாற்றுகின்றவர்தான் வைகோ.
நிலத்தின் ஆணி வேர்களாய் இந்நிலப்பரப்பின் எல்லாத் திக்கிலும் நிறைந்திருக்கின்ற அந்தச் சகாக்களின் உணர்வு எதுவோ, அதுவே வைகோவின் உணர்வு. அவர்கள் எதைச் சொல்கின்றனரோ அதைச் செய்து முடிக்கின்ற தலைமைச் சகாதான் எங்கள் வைகோ. அதனால்தான் தனிப்பட்ட ஆசாபாசங்களுக்காக ஓடிப் போகின்றவர்கள் எந்த அÞதிரத்தைப் பிரயோகித்தாலும் வைகோவின் சகாக்களை அவரிடம் இருந்து பிரிக்க முடியவில்லை. இரத்தமும், சதையுமாக வைகோவுடன் நின்று மறுமலர்ச்சி யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவமும்; பல பதவி வாய்ப்புகளும் பெற்று மறுமலர்ச்சி தி.மு.க.வின் அவைத் தலைவராக இருந்து விலகிச் சென்றுவிட்ட திரு.மு.கண்ணப்பன் அவர்களுடன் தனிப்பட்ட ஆதாயம் சார்ந்த, விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் தவிர்த்து கொங்குநாட்டின் கொள்கை வேங்கைகள் எவரும் செல்லவில்லை என்பது ஒன்றே வைகோ தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க. கொண்டிருக்கும் கொள்கைப் பிடிப்புக்கு ஓர் தெளிவான சான்றாகும்.
அதன் மற்றொரு சான்றுதான் கோவையில் மார்ச் 20ஆம் நாள் இலட்சிய வேங்கை நாஞ்சில் சம்பத் கைதைக் கண்டித்து வைகோ தலைமை ஏற்ற ஆர்ப்பாட்டம். மேடைக்குச் செல்ல காரைவிட்டு இறங்கவே பல நிமிடம் ஆயிற்று. ஒரே உணர்ச்சிப் பிரவாகம். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற அகன்ற வீதியான டாக்டர் நஞ்சப்பா சாலையின் ஒரு பகுதி முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்கிற அளவுக்கு பல்லாயிரவர் திரண்ட கூட்டம்.
‘தினமலர்’ கோவைப் பதிப்பின் மார்ச் 21ஆம் நாளிட்ட ஆர்ப்பாட்ட புகைப்படமே அதற்குச் சான்று. மறுமலர்ச்சி தி.மு.க.வை எவரது விலகலும் சிறிதும் சலனப்படுத்த முடியாது என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?
தினமலர் வாதப்படியே பார்ப்போமானால் இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுகிறவர்கள் எப்போது இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஆனார்கள்.
தி.மு.க.வில் இருந்து அதன் பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன்; துணைப் பொதுச் செயலாளர் ப.உ.சண் முகம் முன்னணித் தளகர்த்தரான க.ராஜாராம் போன்றவர்கள் வெளியேறிய இடங்களுக்கு அதன்பின் அமர்த்தப் பட்டவர்கள்தான் இன்று ‘தினமலர்’ குறிப்பிடுகிற இரண்டாம் கட்டத் தலைவர்கள்.
எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவுக்குப் பின் அ.இ.அ.தி.மு.க. ஜானகி அம்மையார் தலைமையில் ஓர் அணி. இன்றைய அதன் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் ஓர் அணி என்று இரண்டாக பிளவு பட்டபோது எம்.ஜி.ஆருடன் நேசம் காட்டி நின்ற இரண்டாம் கட்டத் தலைவர்கள் எல்லாம் ஜானகி அம்மையாருடன் இணைந்து நின்றனர். அந்த இடங்களுக்கு காலப்போக்கில் அமர்த்தப் பட்டவர்கள்தான் நீங்கள் குறிப்பிடக் கூடிய அ.தி.மு.க.வின் இன்றைய இரண்டாம் கட்டத் தலைவர்கள்.
எல்லாக் கட்சிகளிலும் இரண்டாம் கட்டத்தில் ஏற்படுகின்ற வெற்றிடங்கள் தவிர்க்க முடியாதது மாத்திரமல்ல, அவை அவ்வப்போது நிரப்பப்பட்டுவிடும் என்ற உண்மையை தினமலர் மறந்தது ஏனோ?
எந்த இரண்டாம் கட்டத் தலைவர்களின் விலகல்களும் ஒரு கட்சியைப் பலவீனப்படுத்த முடியாது என்பதையும், வெற்றிடத்தைக் காற்று நிரப்புவது போல காலியிடங்களை கட்சித் தலைமை நிரப்பிக் கொள்ளும் என்பதையும்தான் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. தினமலர் இதனை மறுக்கத் துணியுமா?
மறுமலர்ச்சி தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம் என்றெல்லாம் கட்டங்கள் எதுவும் இல்லை.
கொள்கைக்காக வாழும் இலட்சோபலட்சம் தொண்டர்களின் பாச உணர்வில் எழும்பி நிற்கும் மாளிகைதான் மறுமலர்ச்சி தி.மு.க. இலட்சியத் தாகமும், அறிவுக் கூர்மையும் கொண்ட ஆயிரமாயிரம் தளகர்த்தர்களைத் தன்னகத்தே கொண்ட கட்சிதான் மறுமலர்ச்சி தி.மு.க. கண்ணை இமைகாக்க மறந்தாலும் மறக்கும். ஆனால், என்னைக் காக்க மறவாத தலைவன் வைகோ என்று ஒவ்வொரு தொண்டனும் நம்புகின்ற தலைவர்தான் வைகோ. அந்த நேசமும், நெருக்கமும்தான் மறுமலர்ச்சி தி.மு.க.வின் தடங்கல் இல்லா பயணத்துக்கு அடிப்படைக் காரணமாகும்.
கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் ம.தி.மு.க. தொண்டனின் 15 ஆண்டுகால உழைப்பை உறிஞ்சி, உல்லாசம் எனும் பதவிகளை அனுபவித்துக் கழித்தவர்கள்தானே அன்றி, இயக்கம் வளர தம்மை ஓடாய்த் தேய்த்துக் கொண்டவர்கள் இல்லை. அதனால்தான் பதவிப் பித்தர்களின் விலகல்கள் மறுமலர்ச்சி தி.மு.க.வை காயப்படுத்த முடியவில்லை!
தேர்தல் கூட்டணியில் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ம.தி.மு.க. பலவீனப்பட்டு விட்டதாகத் தினமலர் காட்ட முனைவது யாரையோ திருப்திபடுத்த என்பது மாத்திரம் எங்களுக்குப் புரிகிறது. இது தினமலர் பேண விரும்புகின்ற தரத்திற்கு அழகல்ல.
அரசியல் பகைவர்களை களமாடி வெல்லக்கூடிய சக்தி எங்கள் வைகோவுக்கு உண்டு. வேறு கட்சிகளில் காண முடியாத சொற்போர் புரிவதில் வல்ல நாஞ்சில் சம்பத், மல்லை சத்யா, சிவகங்கை அ.கணேசன், செந்திலதிபன், அழகுசுந்தரம், ஈட்டிமுனை இளமாறன், மணிவேந்தன், அந்திரிதாஸ், மயிலாடுதுறை அழகிரி என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பேச்சாளர் படை எதிர்ப்புகளை தேடிச் சென்று அழித்தொழிக்கும் ஆற்றலோடு நிற்கிறது. எங்கள் பகைவனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் திராணி மறுமலர்ச்சி தி.மு.க.வுக்கு இருக்கிறது.
ஆனால், எல்லாத் தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டிய தினமலர் எங்கள் பகைவர்களின் கை வாளாக மாறி விச அம்புகளை எங்கள் மீது வீசுவது சரிதானா?
ஒரு குடும்ப ஏகாதிபத்தியம் ஆறேழு அதிகார மய்யங்களுடன் தமிழ் நாட்டையே ஆட்டிப்படைத்து கொண்டிருப்பதை நெருப்பாய் பொசுக்க வேண்டிய தினமலர், நீர்த்துப் போனது ஏன்? எதனால்? அது மாத்திரமல்ல, அக்கிரமத்தையும் அதர்மத்தையும் தகர்க்கும் நோக்குடன் வாளாகவும் வேலாகவும் சுழன்று வரும் வைகோவை காயப்படுத்துவது சரிதானா?
‘தினகரன்’ நாளிதழ் அலுவலகத்தில் பட்டப் பகலில் நடந்த படுகொலை கோரத் தாண்டவத்தை நடுநிலையில் நின்று கொந்தளித்திருக்க வேண்டிய தினமலர், அந்த அக்கிரமத்தை ஊருக்கு ஊர் உலுப்பி எடுத்த ஒரே அரசியல் தலைவரான வைகோவைக் காயப்படுத்துவது முறைதானா?
ம.தி.மு.க.-வின் சறுக்கல்கள் பற்றி பட்டியல் இட்டுள்ள தினமலர், இரண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள்; இரண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள்; மூன்று உள்ளாட்சி மன்ற பொதுத் தேர்தல்கள்; ஐந்து சட்டமன்ற இடைத்தேர்தல்கள் என கட்சி தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளில் பன்னிரண்டு தேர்தல்களை தன்னந் தனியாக சந்தித்தபோது, “ம.தி.மு.க.வே சறுக்காத கட்சி...” “வைகோவே நேர்மையான தலைவர்...” அவர்களை முன்னிலைப்படுத்தி எழுதுவோம் என்று முதுகெலும்போடு ஒரு வரிச் செய்தியாவது எழுதி வெளியிட்டதுண்டா?
வாஜ்பாய் மந்திரி சபையில் பதவிச் சுகத்தை அனுபவித்துக் கொண்டே காங்கிரஸ் கட்சியுடன் கள்ள உறவு கொண்டு - மத்திய மந்திரி முரசொலி மாறன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் வாஜ்பாய் சுடுகாட்டுக்கு வந்து திரும்புவதற்கு உள்ளாக காங்கிரசுடன் கைகோர்த்துக் கொண்ட கலைஞர் கருணாநிதியின் சறுக்கல்களை விமர்சித்தது உண்டா?
எந்தக் கட்சியினரைப் பார்த்து பண்டாரம் பரதேசிகளை அடித்து விரட்டுங்கள் என்று இழிவாக எழுதினாரோ, பேசினாரோ, பின்னர் அதே பாரதிய ஜனதாவுடன் உறவு கொண்ட கலைஞர் கருணாநிதியின் சறுக்கல்களை ‘தினமலர்’ என்றேனும் சாடியதுண்டா?
தமிழ்நாட்டில் கூட்டணி சேர்வது குறித்து கணக்கிட்டால் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கட்டத்தில் தத்தமது கட்சியின் நலனுக்காக வெவ்வேறு அணிகளில் நின்று வந்துள்ளன. மறுமலர்ச்சி தி.மு.க. தொண்டர்களின் முழுமையான விருப்பத்தின்படியே கூட்டணி அமைத்து வந்திருக்கின்றது. அதனால்தான் தேர்தல் தோல்விகள் கட்சியின் கட்டுமானத்தைச் சிதைக்க முடியவில்லை. தொண்டர்களையும் வைகோவிடம் இருந்து பிரிக்க முடியவில்லை. எல்லா விலகல்களுக்கும், எல்லா தோல்விகளுக்கும் பின்னரும் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்து முறையான அமைப்பு பலத்தோடு இயங்குகின்ற கட்சி மறுமலர்ச்சி தி.மு.க. என்கிற கர்வத்தோடு தலைநிமிர்ந்து நிற்கின்றோம். இந்நிலையில் எங்களை மட்டும் குறிவைத்து தாக்க வேண்டிய அவசியம் என்ன?
மறுமலர்ச்சி தி.மு.க. தமிழர் உரிமைக் குரல் கொடுக்கும் இயக்கமாய் இம்மண்ணில் நிலை பெற்றுவிட்டது. உலகத்தின் எந்த மூலையில் இருக்கின்ற தமிழனும் தனக்கு தன் இனத்தக்கு ஒரு தீங்கு என்றால் அவன் தொடர்பு கொள்கின்ற தமிழ்நாட்டின் முதல் தலைவர் வைகோ தான். அவர் தமிழர்களின் உரிமைக் குரலாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டார்.
மறுமலர்ச்சி தி.மு.க.-வை அழிப்பதன் மூலம் வைகோவுக்கு தமிழ்ச் சமுதாயம் வழங்கி இருக்கின்ற அந்த அங்கீகாரத்தை தமது ஆயுட்காலத்திற்குள் துடைத்து எறிய கலைஞர் கருணாநிதி விரும்புவதன் விளைவுதான் அவர் ம.தி.மு.க.வை அழிக்க மேற்கொண்டு வரும் முயற்சிகளாகும்.
அந்த முயற்சிகளை முறியடிப்பதற்கும், வைகோவின் பொது வாழ்வைப் பாதுகாப்பதன் மூலம் தமிழினத்தின் உரிமைக் குரலைப் பாதுகாக்க இலட்சோப இலட்சம் தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக எழுவோம்.
எனவே, தினமலர் நாளிதழ் ம.தி.மு.க.வை களங்கப்படுத்துவதை விட்டுவிட்டு, அனைத்துப் பிரிவினரின் நம்பிக்கையைப் பெறுகின்ற வகையில் தன்னைத் திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதனை அரசியல் கடமைக்காக தினந்தோறும் படிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கின்ற ஒரு அரசியல் தொண்டன் என்ற முறையில் வேண்டுகிறேன்.
‘தினமலர்’ இதழின் (22.3.2009)அவதூறுச் செய்தியை மறுத்து அவ்விதழின் ஆசிரியருக்கு அனுப்பப்பட்ட கடிதம்.

No comments:

Post a Comment